செல்வமிக்க ஒருவர், ஒரு முறை தாந்த்ரீக ஆலோசனைக்கு வந்திருந்தார். பல வழிகளில் பணம் புரண்டு வரும் அவருக்கு சமீப காலத்தில் மிகுந்த தடையும், கொடுத்த பணம், வரவேண்டிய பணம் போன்ற எதுவும், கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை. பலரை சென்று பார்த்தும் பல பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை என்றார். மேலும். எந்த வித பரிகாரமானாலும் சரி, செய்ய தயார், ஆனால் நிச்சயம் இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்றார். இது போன்ற பரிகார முறைகளில் அனைவர்க்கும் மிகுந்த பொருட் செலவு கொண்டு தான் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில்லை. வேறு சில நிலைகளில், பணம் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளோர்க்கும், செலவுகள் செய்து தான் ஆக வேண்டும் என்கிற நிலையம் வரும். இதில் பணக்காரர், ஏழை வித்தியாசங்கள் பார்க்க முடியாது. அவரவர்களின் கர்ம நிலையை பொறுத்து மாறுபடும். அவரின் விஷயங்களை சோதித்ததில், பித்ருகளின் அதிருப்தியினால் அவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது உணரப்பட்டது. அவரிடம் அசைவ பழக்கமும் இருந்து வந்தது. முக்கியமாக பெரும் பிரச்சனைகளில் உள்ளோர், எவ்வித பரிகாரம் செய்தும் பலன் காணாத நிலைக்கு, அசைவ பழக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருவது கண்கூடு. ஆகவே, நிலை சரியாகும் வரையாவது அசைவ பழக்கத்தை நிறுத்தி, கீழ்கண்ட பரிகாரத்தை தொடர்ந்து வாழ் நாள் முழுதும் செய்து வரும்படியும், மிக குறைந்த தினங்களில் பலன் தெரிய ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டது. வேறு பரிகாரங்களை அவசியமில்லை என்றும் கூற, அவர் பெருத்த பணம் செலவு இல்லாமல் இதை மட்டும் செய்து எப்படி பிரச்சனைகளில் இருந்து மீள போகிறோம் என மனதில் நினைத்தவாறே சென்றது எம்மால் உணர முடிந்தது. ஆனால் கூறியபடி மிக குறைந்த நாட்களில், தடைகள் நீங்கப்பெறுவதை கண்டு, மகிழ்ந்த படி இப்படிப்பட்ட எளிய பரிகாரத்தின் சக்தியை உணர்ந்து விட்டதாக மீண்டுமொறுமுறை நேரில் வந்து நன்றி கூறி சென்றார். அதை உங்களுடன் பகிரவே இந்த கட்டுரை.
பசுவானது தன் உடலில் பஞ்ச பூத சக்தியையும் உள்ளடக்கியதாகும். நீர் சக்தியை நாயும், நெருப்பின் சக்தியை எறும்பும், காற்றின் சக்தியை காகமும் உள்ளடக்கியவை. தினசரி உணவு உண்ணும் முன், பித்ருக்களை மனதில் வேண்டியபடி வாழை இலையில் கடவுளுக்கும், நிலத்தில் காக்கைக்கும், இலையில் பசு, நாய் மற்றும் எறும்புகளுக்கு சிறுது உணவை வைத்து விட்டு, ஒரு மண் சட்டியில் பறவைகளுக்கு நீர் வைத்து விட்டு பின்பு தான் உண்ண வேண்டும். பித்ரு லோகத்தில் (மறைந்தோர்-முன்னோர்) உள்ளோரை உடனடியாக மனம் குளிர வைக்கும் பரிகாரம் இது.
நம் கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதை அடியோடு நீக்கும் சக்தி மறைந்த நம் முன்னோர்களுக்கு உண்டு என்பதை மறந்து விட கூடாது. மேலும் வாழ் நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது, ஒரு அனாதை சவத்தை நல்லபடி தகனம் செய்து காரியங்கள் செய்ய உதவ வேண்டும்.
பின் அனைத்தும் சுபமே.