எல்லா கஷ்டங்களுக்கும் பரிகாரங்கள் பலன் தருமா?
பரிகாரங்கள் அல்லது வேதங்களில் கூறியுள்ள ப்ராயச்சித்தங்கள் என்பவை ராமாயண காலத்திற்கும் முற்பட்டவை.சிலர் பரிகாரங்கள் பலன் தராது அனைத்தும் நம் கர்மப்படி தான் நடக்கும் என்பர்.அப்படி இருப்பின் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அதிலும் ஆத்மாவானது முக்தி பெற வழியில்லாமல் போகும்.கர்மவினைகளை அனுபவித்து தான் கழிக்க வேண்டும் என்பதல்ல-உணர்ந்தும் அறிந்தும் நம் நிலையை மாற்றி கொண்டு சரியான பாதையில் போக செய்வதே பரிகாரங்கள் அல்லது ப்ராயச்சித்தங்கள் ஆகும்.
பல ஜோதிடர்கள் பரிகாரம் கூறாமல் இருப்பதற்கு அல்லது கோவில் சார்ந்த பரிகாரங்கள் கூறுவதற்கு காரணம், ஜாதகரின் கர்மவினைகளை மாற்றுவதன் மூலம் தாமும் அதை அனுபவிக்க வேண்டி வரும் என்பதே. இது நீரில் மூழ்கி கொண்டுள்ளோரை காப்பற்றி தான் மூழ்கி மரணிக்கும் நிலையை போன்றதாகும். தற்சமயம் யூ டியூப் மற்றும் இணையதளம்,முகநூல் போன்றவற்றில் பலர் பல்வேறு பரிகாரங்கள் கொடுத்து வருகின்றனர்.நாமும் கொடுத்து வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் இந்த இணையத்தில் மற்றும் முகநூலில் கொடுத்துள்ள அனைத்து பரிகாரங்களும் ஜோதிட போர்வையில் உள்ள பலராலும் காப்பியடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன .
இன்றும் தொடர்ந்து அதை செய்து வருகிறார்கள். மேலும் ஒரு படி மேலே போய்,கோவையை சார்ந்த குபேர திருடன் தன்னுடைய புத்தகத்திலும் எம்முடைய அனைத்து பரிகாரங்களையும் தன்னுடையது போல் வெளியிட்டு கொழித்து வந்தார்.நாம் கொரோனா காலத்தில் நேரம் கிடைத்தபடியால் யூ டியூபில் வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்து இவர்களின் உண்மை முகத்தை ஆதாரத்துடன் நிரூபித்ததும், இவர்கள் சிறிது சிறிதாக காணாமல் போய் கொண்டிருக்கின்றனர். (அல்லது திருட வேறு இடம் தேடி கண்டுபிடித்திருக்கலாம்) மக்களும் பெருமளவில் புரிந்து கொண்டனர்.
நீங்கள் பெரிய புத்தக நிலையங்கள் என நினைத்து கொண்டிருக்கும் பலவும் எம்முடைய பரிகாரங்களை ஆன்மீக நுணுக்கங்களை காப்பியடித்து தங்களுடைய புத்தகத்தில் வெளியிட்டு பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறியதும், சிலர் தனி ஈமெயில் மூலம் மன்னிப்பு தெரிவித்தும் சில புத்தகங்கள் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவித்தும் உள்ளன.அனைத்திற்குமான PROOF எம்மிடம் உள்ளது.சிலதை வெளியிட்டும் உள்ளோம். மேலும் தெய்வீகமான பெயரில் வெளிவரும் இணையதளம் நம்முடைய பெரும்பாலான பரிகார முறைகளை காப்பியடித்து அப்படியே வெளியிட்டு வந்தது. சட்ட நடவடிக்கை பற்றி கூறியதும், பின்னர் சிலவற்றில் நம்முடைய பெயரையும் இணைத்து மன்னிப்பும் கேட்டார்கள். எனினும் இன்றளவும் சில வார்த்தைகளை மாற்றி தன்னுடைய திருட்டு தொழிலை தெய்வீகமாய் தொடர்ந்து வருகின்றனர்.
நிற்க, இனி பரிகாரங்கள் பற்றி காண்போம்.
பரிகாரங்கள் பலிதம் கொடுக்க முடியாத ஜாதகங்கள் உண்டா என கேட்டால்,அப்படி இல்லை. (சில துஷ்ட பாதிப்புக்கள் கொண்ட ஜோதிட நபர்கள், ஜாதகரின் ஜாதக புத்தகத்தை 'இதெல்லாம் ஒரு ஜாதகமா?" என விசிறி அடிப்பதாக தொடர்ந்து கேள்வி பட்டுவருகின்றோம். இவர்களை ஜாதகம் பார்க்க செல்வோரும் தயங்காமல் எதை கொண்டு அடிக்க வேண்டுமோ அப்படி அடித்து விட்டு வரவேண்டும். இல்லாத பட்சத்தில் இவர்களின் அட்டூழியம் தொடரும். )
இறைவனின் அருளில் நம் அனைவரின் ஜாதகமும் சிறந்த ஒன்றே.சில தசா புத்தி களங்களில் நிலை கடுமையாக மாறி பரிகாரங்கள் பலிதம் தராத நிலை ஏற்படுவது உண்டு அல்லது பலன் தர சில காலங்கள் ஏற்படுவதுண்டு.
பரிகாரங்களில், ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரம் சென்று லிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் ராமர் ராமேஸ்வரத்தில் தில தர்பணமும் செய்தார். பரிகாரங்கள் செய்யும் சமயம் கிரக சாந்தி என்பதை நேரடியாக செய்யாமல் கிரகத்திற்கு உரிய பஞ்ச பூத சக்தியை சமன் செய்து சாதகமாக்கி கொள்வது உடனடியாக பலன் தரும் ஒன்றாகும்.
உதாரணத்திற்கு, பல்வேறு பிரச்சனைகள் கஷ்டங்கள் அக்னி பரிகாரம் என கூறப்படும் ஹோமம் யாகங்கள் மூலம் சரி செய்து கொள்ளமுடியும். தினசரி குறிப்பிட்ட கோவிலில் தீபமேற்றுவது மற்றும் முறையாக தீப தானம் செய்வதும் சிறந்த பலன் தரும்.சிலருக்கு நீர் சார்ந்த பரிகாரம் அதாவது பூஜித்த கலச ஜல அபிஷேகம் மேலும் புண்ணிய நதிகளில் நீராடுவது, அப்படி முடியாத சமயம் அதற்கு இணையாக தினமும் கங்கை நீரை சிறிது குளிக்கும் நீரில் ஊற்றி குளிப்பது, நீர் தானம் செய்வது,கோவிலில் நீர் தொட்டிகள் அமைத்தல் குளம் வெட்டுதல் போன்றவை பலன் தரும். பொதுவாக அனைவரும் நீர் தானம் மனிதர்களுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ வாழ்நாள் முழுதும் செய்து வருவது அவசியம். குறிப்பாக பசுக்களுக்கு பறவை இனங்களுக்கு நீர் தானம் செய்வது நம்மை மட்டுமல்ல நம் சந்ததியினையரையும் வாழ்வாங்கு வாழ செய்யும்.
ஆகாய தத்துவத்தில் உள்ள கிரக நிலைகள் கடுமையாக இருந்தால் தியானம் செய்வது யோகா நிலையை கற்று செய்வது போன்றவை நல்ல பலன் தரும். வாயு தத்துவ நிலைக்கு, சுவாச பயிற்சி பலன் தரும்.பிறரின் சுவாசத்திற்கு உதவுவது அதாவது மருத்துவமனையில் OXYGEN உதவி தேவைப்படுவோருக்கு செய்வதும் சிறந்த பரிகாரம். நில தத்துவத்திற்கு இரத்தின கற்கள் அணிவது, மலை குன்று போன்ற இடங்களில் குடியிருக்கும் தெய்வத்திடம் சரணடைவது நல்ல பலன் தரும். இவற்றில் கோவிலுக்கு செல்வது புண்ணிய நதி நீராடல் போன்றவை ஒரே முறையில் பலன் தந்துவிடாது.தொடர்ந்து ஜோதிட அறிவுறுத்தலின் படி செய்து வரவேண்டும். சிலர் தோஷ நிவர்த்தி பற்றி எம்மிடம் சொல்லும் சமயம்,தாங்கள் "சில வருடங்கள் முன் காளஹஸ்தி சென்றாகி விட்டது அல்லது திருநள்ளாறு சென்றாகிவிட்டது" என்பர். ஒரே முறையில் இவை பலன் தந்து விட்டால் நாம் தொடர்ந்து தைரியமாக பல கர்ம வினைகளை சேர்த்து கொண்டே இருப்போம் அல்லவா?
பரிகாரம் அல்லது தோஷ நிவர்த்திக்காக கோவிலுக்கு செல்லும் சமயம் லக்னம் அல்லது ஹோரை பார்த்து செல்வதும் கோவிலில் குறைந்தது 30 நிமிடம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தோஷத்தின் கடுமையை பொறுத்து தங்கி வழிபாடு செய்யவேண்டும்.
ஹோமம் இரத்தின கற்கள் போன்றவை பலருக்கு உடனடி பலன் தரும்-காரணம் அவை ப்ரத்யேகமானவை.கோவில் புண்ணிய நதி போன்று பல மனித ஆற்றல்கள் ஒன்று கூடக்கூடிய பரிகாரங்கள் அல்ல இவை.
தாந்த்ரீகத்தில் அனேகமாக அனைத்திற்கும் பிராயச்சித்தம் உண்டு என்றாலும், அதை கொடுக்கக்கூடிய தகுதி உள்ள நபர்களை அறிந்து கொடுக்க வேண்டியது தாந்த்ரீகரின் அல்லது ஜோதிடரின் கடமை. கூறிய ஆயுதத்தை மேல் நோக்கி விட்டெறிந்தால் அவை கீழ்நோக்கி வருகையில் எவர் தலையில் விழும் என கணிக்க முடியாதல்லவா? அது போல் தான்.
ஒரு முறை கடுமையான குடும்ப பிரச்சனையில் இருந்த, மனைவியால் மிக அதீத துன்பத்திற்கு உள்ளான ஒருவருக்கு யாக நிவர்த்தி செய்து கொண்டிருந்த சமயம், மூன்று முறைக்கும் மேல் அக்னி துகள்கள் எம் மேல் பெரிய அளவில் தெரித்தும் அதில் ஒரு முறை இடது கால் தொடையை பதம் பார்க்கவும் செய்தது. ஆனால் வெகு சீக்கிரம் அந்த நபரின் பிரச்னை தீர்ந்து இன்றளவும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் என்பது வேறு விஷயம்.
சரி, உண்மையான தாந்த்ரீகருக்கான தகுதி என்ன? அவர் எவையெல்லாம் கற்றிருக்க வேண்டும்? எத்தகைய தெய்வ சக்தி இருக்க வேண்டும்?
உங்களுக்கு ஆர்வம் இருப்பின் மேற்கண்டவை பற்றியும் இவற்றில் எம் அனுவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.