குறிப்பு : இங்கே குறிப்பிட்டுள்ளது மஹாலக்ஷ்மி தாயாரின் சகோதரி பற்றியது அல்ல. பல காலமாக அப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. இதை பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளிவரும்.
ஆலோசனைக்கு வந்து பரிகாரங்கள் கேட்டு சென்ற ஒரு நபர் ஒரே மாதத்திலேயே மூன்று முறை வந்து விட்டார். தான் மிகுந்த துரதிர்ஷ்டசாலி, எதுவும் நல்லது நடப்பதில்லை என ஒரே குமுறல் !! அவரிடம் நாம் கேட்ட கேள்வியை தான் இந்த பதிவின் தலைப்பாகவும் , அவருக்கு நான் கூறிய விஷயங்களை பதிவாகவும் கொடுத்துள்ளேன்.
மேற்கண்ட மூதேவி எனப்படும் "அலக்ஷ்மி" பருத்த உதடுகளை கொண்டவள். அரச மரத்தில் உச்சி சாய்ந்தபின் மறு நாள் சூரிய உதயம் வரை வசிப்பவள். சனிக்கிழமை மட்டும் அவ்விடத்தில் குடியிருக்கமாட்டாள். காரணம் அன்றைய நாள் முழுதும் மஹாலக்ஷ்மி தயார் அவ்விடத்தில் வசிப்பது தான். அதனால் தான் அரச மரத்திற்கு சனியன்று விளக்கேற்றி வழிபட தொடர்ந்து கூறிவருகிறோம். மேலும் மற்ற நாட்களில் அரச மர வழிபாடு செய்யும் சமயம், மரத்தை தொடாமல் வழிபட வேண்டும். நம் மனதில் உள்ள பொறாமை, அகங்காரம், பேராசை இந்த மூன்றின் சூட்சும ரூபம் தான் 'மூதேவி' அல்லது 'அலக்ஷ்மி' . இவற்றை விட்டொழிப்பது மிக முக்கியம், மேலும் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்கள் எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பதும்
மிக முக்கியம். இல்லையேல், அலக்ஷ்மி மட்டும் அல்ல, சனியும் கூடவே வந்து வசிக்க தொடங்கி விடுவார். இப்படி தாம் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலியாக இருப்பதாக ஒருவர் எண்ணினால், தம்மிடம் மேற்கண்ட மூன்று குணங்கள் உள்ளனவா என்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.அப்படி செய்கையில் நமக்கு நாம் உண்மையாக இருப்பின், மேற்கண்ட நிலையில் இருந்து விரைவாக வெளிவரலாம். பின்பு, நாம் ஏற்கனவே கூறியுள்ள 'ராக் சால்ட்' குளியல் உடனடியாக தொடங்குவது நன்று. மேலும், தங்கள் வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தை, மேற்கண்ட உப்பை கொண்டு கழுவி விடுதல், மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும். பின் தினசரி தூபமிடுதல், விளக்கேற்றி வைத்தல், பஞ்சகவ்யம் கொண்டு அஷ்ட திக்குகளிலும் தெளித்தல் போன்றவை தினசரி செய்து வருதலும் அவசியம். மிக முக்கியமாக மேற்கண்ட நிலையில் உள்ளோர், சரஸ்வதி வழிபாடு தொடர்ந்து செய்து வர 'அலக்ஷ்மி' விரட்டப்பட்டு 'லக்ஷ்மி' குடியேறுவார் உங்களிடமும் உங்கள் இல்லத்திலும்.